ஆளில்லா விமானம் மூலம் பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் சோதனை- மர்ம அறை கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள தனியார் கிரானைட் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிரானைட் குவாரிகளை சோதனையிட நவீன ஆள் இல்லா விமானம் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த விமானத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவில் வடிவமைத்துள்ளனர். இதேபோன்ற ஆள் இல்லாத விமானம் இதுவரை ராணுவத்திலும், பாதுகாப்பு துறையிலும் தான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது தான் இந்த பணிக்கு முதன்முறையாக பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆள் இல்லா விமானம் 11/2 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. மொத்த எடை 1.8 கிலோ. இதில் 4 இறக்கைகள் உள்ளன. இவற்றில் தலா 2 விசிறிகள் மூலம் மொத்தம் 8 விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் கேமரா, ரேடார், ஜி.பி.எஸ். கருவி போன்றவை இடம்பெற்று உள்ளன. ரிமோட் மூலம் இயங்கும் இந்த ஆள்இல்லா விமானம் ஒரு கிலோ மீட்டர் உயரத்திலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் பறக்கும்
இந்த ஆள்இல்லா விமானத்தை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் 5 ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு கொண்டு வந்துள்ளனர். இதனைக் கொண்டு திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் உள்ள பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான குவாரியில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அது எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கீழே அமைக்கப்பட்டிருக்கும் கணிணியில் உடனுக்குடன் பதிவாகின. இந்த புகைப்படத்தின் மூலம் அந்த கிரானைட் குவாரிக்குள் ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறை பெரிய கற்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்ததால் அதை சாதாரண சோதனையின் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு அந்த அறைக்குள் புகுந்தனர். 10 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட அந்த அறைக்குள் 3 இரும்பு லாக்கர்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் உடைத்துப் பார்த்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. அந்த அறைக்கு வெளியே கிரானைட் கற்களுக்கு இடையே 21/2 அடி உயரத்தில் இன்னொரு பெட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பயன்படும் வெற்றுப் பேப்பர்கள் இருந்தன. இந்த விடைத்தாள்கள் எப்படி இங்கு வந்தன என்பது மர்மாக உள்ளது.