காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க ஜெயலலிதா டெல்லி பயணம்

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி நதிநீர் ஆணையம் 1997-ல் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, தமிழக முதல்வர்களும் இடம்பெற்றுள்ளனர். காவிரி நதிநீர் ஆணையத்தின் முந்தையக் கூட்டம் 2003 பிப்ரவரி 10-ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை ஆணையத்தின் கூட்டம் கூட்டப்படவில்லை.
இந்த நிலையில், காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டாமல் இருப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, வரும் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஆணையத்தின் ஏழாவது கூட்டம் நடைபெற இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா வரும் 19-ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். கூட்டத்தில் பங்கேற்ற பின், அன்றைய தினம் மாலையே அவர் சென்னை திரும்புவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications