திருச்சி அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்: ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி: திருச்சியை அடுத்த தொட்டியம் பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மகாய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. முதலில் காய்ச்சல் ஏற்பட்டு பிறகு படிப்படியாக மூட்டு, தலை உட்பட உடல் முழுவதும் வலி ஏற்படுகிறது. மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டுப்புத்தூர், காடுவெட்டி, தொட்டியம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது,
தென்னங்கீற்று முடையும் தொழில் இங்கு அதிகளவில் நடைபெறுவதால், கீற்றுகளை தண்ணீர் தொட்டிகளில் ஊறவைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் சுகாதாரமற்ற தொட்டி தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. கொசுக்களால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கொசுக்களின் உற்பத்தியை தடுக்க, சுகாதார துறை சார்பில் கொசு மருந்து அடிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் திருச்சி சுகாதாரத் துறை இணை இயக்குனர்(பொறுப்பு) மோகன் மேற்பார்வையில் காடுவெட்டி அரசு மருத்துவர் இளவரசி தலைமையிலான மருத்துவ குழுவினர் கிராமப்பகுதிகளில் முகாமிட்டு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.