சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 10 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் ஹூவாகாவ்டன் என்ற நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 6ம் தேதி பணியாளர்கள் வழக்கம் போல வேலையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 10 தொழிலாளர்கள் நின்ற மேடை ஒன்று கவிழ்ந்தது. இதில் 10 பேரும் மண்ணில் புதைந்து மூச்சு திணறி பலியாகினர்.
நேற்று முழுவதும் நடைபெற்ற மீட்பு பணியில் பலியான 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
கடந்த வாரம் சூசுன் மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் விஷவாயு தாக்கியதில் 45 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சீனாவில் தான் அதிக ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. ஆனால் சுரங்கங்கள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க விபத்துகளில் 1,973 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications