மீண்டும் குடியரசு தலைவருக்கான வேட்பாளர் ஒபாமா - அறிவித்தார் க்ளிண்டன்
அமெரிக்க குடியரசுக் கட்சி தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்க, தேசிய அளவில் மாநாடு நடத்தப்பட்டு, அதில் கட்சி விதிப்படி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
பில் கிளின்டன்
ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு, செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழன் வரை சார்லெட் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஒபாமாவை வேட்பாளராக அறிவித்த கிளின்டன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.
அவருக்கே உரிய பாணியில், கடினமான விஸயங்களையும், சாமானியர்களுக்கும் புரிய வைக்கும் வகையில் அது இருந்தது.
எல்லோருக்கும் நண்பன் ஒபாமா
'எதிர் அணியில் இருப்பவர்களையும் நண்பர்களாக்கி, அரவணைத்துக் கொண்டு நாட்டு நலனுக்காக பாடுபடுபவர் ஒபாமா' என்றார் க்ளிண்டன்.
மேலும் அவர் பேசுகையில், "எதிர்க்கட்சியை சார்ந்தவர்களை தனது அமைச்சர்களாக்கியதோடு மட்டுமல்லாமல். உட்கட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனை குடியரசுத் துணைத் தலைவராக்கியதோடு, ஈராக் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும், பொருளாதார சீர்திருத்த கொள்கையிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உட்கட்சி தேர்தலில் நேருக்கு நேராக போட்டியிட்ட எனது மனைவி ஹிலாரியையும் தனது அமைச்சரவையின் முக்கிய பொறுப்பான வெளியுறவுத் துறைக்கு நியமித்தார். ஹிலாரியுடன் தேர்தலில் பணியாற்றிய ஏழு பேரையும் அமைச்சர்களாக ஆக்கி கொண்டார்.
இப்படி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒபாமாவுக்கு எதிர்க்கட்சியினர் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அமெரிக்காவில் வேலை வாய்ப்பை பெருக்க உதவியாக இருக்க வேண்டிய குடியரசு கட்சியினர், ஒபாமாவை குடியரசுத் தலைவர் என்ற வேலையிலிருந்து நீக்குவதற்காகத்தான் நேரத்தை வீணடித்தனர்.
யார் ஆட்சியில் வேலைவாய்ப்பு?
கடந்த 52 வருட அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி 28 வருடங்களும், ஜனநாயகக் கட்சி 24 வருடங்களும் ஆட்சியில் இருந்துள்ளன. இந்த காலக் கட்டத்தில் அமெரிக்காவில் 66 மில்லியன் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவற்றில் 24 மில்லியன் மட்டுமே எதிர்க்கட்சியினரின் ஆட்சியிலும், மீதம் 42 மில்லியன் வேலை வாய்ப்புகள் ஜனநாயக கட்சி அதிபர்களாளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தமது கட்சி வலுவான நடுத்தரவர்க்கத்தினரை மையப்படுத்தி பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினர் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக்குவதற்குத் தான் திட்டம் போடுகின்றனர்.
மோசமான பொருளாதார நிலையில் பதவியேற்ற ஒபாமா
'அமெரிக்காவின் மிகக் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு(great depression) பிறகு இது வரை எந்த அமெரிக்க அதிபரும் சந்திக்காத மிக மிக மோசமான பொருளாதார சூழலில் ஒபாமா பதவியேற்றார். நான் உட்பட எந்த அதிபராலும் இந்த பொருளாதாரத்தை 4 ஆண்டுகளில் மாற்றியிருக்க முடியாது. ஆனால் ஒபாமா வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னேற்ற பாதைக்கு திருப்பி விட்டார்.
அவர் ஆட்சிக்கு வரும் போது மாதம்தோறும் 75 ஆயிரம் வேலைகள் பறிபோய் கொண்டிருந்தன. ஆனால் கடந்த 29 மாதங்களில் நிலைமை திரும்பி 4.2 மில்லியன் தனியார் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. மீண்டும் தொழிற்சாலை வேலைகள் அமெரிக்காவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
எனது ஆட்சிக்கு முன்னாலும், பின்னாலும் வந்த குடியரசுக் கட்சி ஆட்சியில் பற்றாக்குறை கடுமையாக உயர்ந்தன. ஆனால் என்னுடைய ஆட்சியில் மூன்று ஆண்டுகள் சேமிப்பு பட்ஜெட் போட்டேன்.
ஒபாமா 4 ட்ரில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையை சரிசெய்ய கூடுதல் வருமானம், செலவுக் கட்டுப்படுத்துதல் என சரியான கணக்கு வைத்திருக்கிறார்.
ஆனால் எதிர்த்து போட்டியிடும் ராம்னி, பணக்காரர்களுக்கு 5 ட்ரில்லியன் டாலர்களுக்கு வரியை தள்ளுபடி செய்தால் அரசின் பற்றாக்குறை கூடுதலாகுமே. எப்படி குறையும் என்று கேட்டால் ஆட்சி அமைத்த பிறகு சொல்கிறேன் என பதில் சொல்கிறார்கள். கூட்டல் கழித்தல் கணக்கு கூட தெரியாதவர்களாக இருக்கிறார்.
நடுத்தர மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய திட்டங்களை அமல் படுத்தி வரும் ஒபாமாவை வெற்றிப்பெறச்செய்ய வேண்டும்," என்று பலத்த கரகோஷத்துடன் பேசி முடித்தார்.
மிஷல் ஒபாமாவின் அசத்தல் பேச்சு
முன்னதாக, முதல் நாள் நிகழ்ச்சியில் நாட்டின் முதல் பெண்மணி மிஷல் ஒபாமா அசத்தலாக பேசினார்.
முக்கால் மணி நேரம் பேசிய அவர், "23 வருடங்களுக்கு முன்னால் தான் பார்த்த அதே ஒபாமா, இன்றும் அப்படியே அடித்தட்டு மக்களுக்காக உழைப்பவராக இருக்கிறார். அதிபர் பதவி அவரை மாற்றிவிட வில்லை, மாறாக உண்மையான ஒபாமா தான் மேலும் வெளிப்பட்டிருக்கிறார். அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவித்த நிலையில் கூட பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவது, என்னை டின்னருக்கு அழைத்து செல்வது, எனக்காக கார் கதவை திறந்து விடுவது என பாசத்திற்குரிய தந்தையாகவும் கணவராகவும் இருந்தார்," என சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஜனநாயகக் கட்சியின் இந்த மாநாட்டில் இந்திய வ்ம்சாவளியினர் பெருமளவில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.