நாமக்கல்லில் நாய்க்குட்டி-பூனை சண்டையில் வீடு தீப்பிடித்து பெண்ணுக்கு 100% தீக்காயம்
நாமக்கல்: நாமக்கல்லில் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியும், பூனையும் சண்டைபோட்டபோது எரியும் அடுப்பில் மண்ணெண்ணெயை தட்டிவிட்டதால் பெண் ஒருவரின் மீது தீப்பிடித்ததில் அவருக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் டவுன் கொல்லன் பட்டறை தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார். அவரது மனைவி சுஜாதா(40). அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் ஒரு நாய்க்குட்டியையும், பூனையையும் வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் சுஜாதா சமையல் செய்து கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு பெண் மண்ணெண்ணெய் இரவல் கேட்டுள்ளார். அவருக்கு கொடுப்பதற்காக ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி ஸ்டவ் அருகில் வைத்துள்ளார் சுஜாதா.
அப்போது சண்டை போட்டுக் கொண்டிருந்த நாய்க்குட்டியும், பூனையும் அந்த மண்ணெண்ணெய் பாட்டிலை ஸ்டவ் மீது தட்டிவிட்டன. இதில் குப்பென்று தீப்பிடித்தது. மேலும் பாட்டிலில் இருந்து மண்ணெண்ணெய் தரையில் சிந்தியதால் தரையிலும் தீ பரவியது. இதில் அடுப்புக்கு அருகில் நின்று கொண்டிருந்த சுஜாதாவின் சேலையில் தீப்பிடித்து அது அவரது உடலிலும் பரவியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில் அவருக்கு 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.