காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க ஜெ. நாளை டெல்லி பயணம்: இரவே சென்னை திரும்புகிறார்
9 ஆண்டுகள் கழித்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தர முடியாது என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்க கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு செய்துள்ளா. அதே சமயம் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் கர்நாடக, தமிழக முதல்வர்களிடையே காரசார விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நாளை நடைபெறும் காவிரி நதிநீர் ஆணையத்தின் 7வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து நாளை டெல்லி செல்கிறார். அன்றிரவே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீ்ர் ஆணையக் கூட்டம் நாளை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் ஜெயலலிதா நாளை நண்பகல் 12 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். கூட்டத்தை முடித்துக் கொண்டு அன்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர், அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை:
இந் நிலையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் மற்றும் அம்சங்கள் குறித்தும், தமிழகத்தின் நிலைப்பாடு குறித்தும், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.