கருணாநிதி மகள் செல்வியின் மருமகனுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்
சென்னை: நில மோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
சென்னை தெற்கு கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வி.எம்.ஜோதிமணி. இவர் செல்வியின் மருமகன். இவர் மீது வி.நெடுமாறன் என்பவர் நில மோசடி தொடர்பாக சென்னை போலீசிடம் புகார் கொடுத்தார்.
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நிலத்தை விற்பதாகக் கூறி, மூன்றரை கோடி ரூபாயை முன்பணமாக வாங்கிவிட்டு, அதை திருப்பித் தரவில்லை என்று ஜோதிமணி மீது புகார் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். நெடுமாறனின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் 406, 420 மற்றும் 506(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 19.9.12 அன்று வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்காக ஜோதிமணிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதைத் தொடர்ந்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோதிமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி மனுதாரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பை வாசித்துப் பேசும்போது,
புகார்தாரர் மற்றும் மனுதாரருக்கு இடையே நடந்த கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும். மனுமீதான விசாரணை நடந்தபோது, இருதரப்பினரும் அமர்ந்து, பரிவர்த்தனை கணக்குகளை சரிபார்த்து, பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாமே என்று ஒரு கட்டத்தில் கோர்ட் கருத்து கூறியது.
இதற்கு புகார்தாரர் தரப்பில் ஒப்புக்கொண்டாலும், மனுதாரர் தரப்பினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. மனுதாரர் கைது செய்யப்படுவதைவிட பணத்தை திரும்பப் பெறுவதையே அதிகம் விரும்புவதாக புகார்தாரர் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
பிரச்சினைக்குரிய தொகையை மனுதாரர் டெபாசிட் செய்துவிட்டால், இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாது என்று கோர்ட் கருதுகிறது. எனவே கடுமையான நிபந்தனைகளுடன் மனுதாரர் ஜோதிமணிக்கு முன்ஜாமீன் அளிக்கிறேன்.
அதன்படி, மனுதாரர் ஒரு லட்சம் ரூபாய்க்கான தனி பிணைத் தொகையையும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதத்தையும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அவர் சைதாப்பேட்டை 11-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்னும் 2 வாரங்களுக்குள் ரூ.50 லட்சம் தொகையை செலுத்த வேண்டும். மனுதாரர் பெயரிலோ அல்லது அவருக்கு நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள ரூ.1.25 கோடி மதிப்புள்ள சொத்து உத்தரவாத பத்திரத்தையும் கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலீசார் முன்னிலையில் 2 வாரங்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு ஜோதிமணி ஆஜராக வேண்டும். ஆஜராகும்போது, வங்கிக் கணக்கு புத்தகங்கள், பணப் பறிமாற்றம் தொடர்பான வங்கி அறிக்கைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஜோதிமணி கொண்டு வரவேண்டும். போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.