தமிழகத்தில் மத்தியக் குழு: 4 நாட்களில் காவிரி நீர் தேவை குறித்து அறிக்கை
சென்னை: காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தினமும் 9,000 கன அடி நீரைத் தர கர்நாடகம் மறுத்தது. இதையடுத்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
கர்நாடகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீற முடியாமல் கடைசியில் கடந்த 30ம் தேதி முதல் கர்நாடக அரசு காவிரியில் தினமும் 9,000 கன அடி நீரை திறந்து விட்டு வருகிறது.
ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களிலும் அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, சாகுபடி பயிர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது.
மத்திய நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் துரு விஜய் சிங் (டி.வி.சிங்) தலைமையிலான ஒரு குழு நேற்று சென்னை வந்தது. இதில் மத்திய நீர் ஆணையத்தின் தலைமை பொறியாளர்கள் ஏ.மகேந்திரன், ஆர்.கே.குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவினர் சென்னை கோட்டையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார், பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் சிவசங்கரன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தமிழக அதிகாரிகள், இங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு, அணைகளுக்கு வரும் தண்ணீர், அணையில் இருந்து வெளியேறும் நீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் நிலைமை குறித்து ஆதாரத்துடன் விளக்கினர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய நீர்ப்பாசன அமைச்சக செயலாளர் துரு விஜய்,
தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு, அணைக்கு வரும் நீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பயிர்களின் நிலைமை போன்றவை குறித்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்வது எங்கள் பணி அல்ல. அதற்கு தனியாக மத்திய குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். நாங்கள் உடனே கர்நாடகா சென்று அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அவர்கள் தரப்பு கருத்துகளை கேட்போம். எங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் 4 நாட்களில் சமர்ப்பிப்போம் என்றார்.