அதிமுக ஆட்சியில் ரூ.6000 கோடி ஊழல் நடந்துள்ளது... விஜயகாந்த் பகீர் புகார்
தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு வந்த விஜயகாந்த் அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்,
கடந்த ஆட்சியில் தப்பு செய்தார்கள் என்றுதான் மக்கள் தூக்கி எறிந்தார்கள். இந்த ஆட்சியில் அதைவிட அதிகமாக ஊழல் நடக்கிறது.
தமிழக மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஏன் முதல்வர் வீட்டில் ஏசி மெஷினை நிறுத்தட்டும். சட்டசபையில் மின்சாரத்தை நிறுத்தட்டும்.
கடந்த ஆட்சியில் பாராட்டு விழாக்களாகவே நடந்தது. இந்த ஆட்சியில் பதவியேற்பு விழாக்களாகவே நடக்கிறது.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் வரும் வழியில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. ஒவ்வொரு ஊரிலும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டேன். ஜெயலலிதா என்னைப் போல் காரில் வந்து பார்க்கட்டும். ஹெலிகாப்டரில் ஏன் போகிறார். அவர் என்ன என்னை அரிவாளால் வெட்டுவாரா. இப்படிப் பேசினால் என் மீது வழக்குப் போடுவார்கள். அதனை நான் சந்திப்பேன்.
இந்த ஆட்சியில் இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கடல் மணலை கொள்ளையடிக்கிறார்கள். அதில் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். இதனை மக்களாகிய நீங்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும். மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். தவறு செய்யும் ஆட்சியாளர்களை மாற்ற முடியும்.
பாராளுமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவேன். அப்போது மக்கள் தங்களின் கோபங்களை காட்ட வேண்டும். கூட்டணி வைத்தால் தேமுதிக கோரிக்கைக்கு உடன்பட்டு உத்தரவாதம் எழுதிக் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி வைப்போம். ஒரு கூட்டணி வைத்து பார்த்தோம். இனிமேல் கூட்டணி வேண்டாம்.
மத்தியில் ஆளும் காஙகிரஸ் அரசு கேஸ் விலையை ஏற்றியுள்ளது. வருடத்திற்கு 6 சிலிண்டர்கள்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 3 சிலிண்டர்கள் கூடுதலாக கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போடவில்லையா. சோனியா மருமகன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால் காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்.
யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் மின்வெட்டு இருப்பதை கண்டித்து, மக்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இவர்கள் மக்ககளுக்காக ஆட்சியை நடத்தாமல், கடந்த திமுக ஆட்சியையே குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின்திட்டங்களைதான் அதிமுக ஆட்சியாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எதுவும் செய்யவில்லை. மின் தேவைக்கு ஏற்ப புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டவில்லை.
காவிரி பிரச்சனையில் தமிழகம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் அமைதியாகவே இருக்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டுக்கு வந்தால் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்பது ஏமாற்றுவேலை. கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதா ஏன் சந்திக்க மறுக்கிறார்.
5 கோடி ஒதுக்கீடு, 10 கோடி ஒதுக்கீடு, அந்த திட்டம் இந்த திட்டம் என்று அறிக்கை விடும் அறிக்கை ராணியாக இருக்கிறார்கள். மக்களிடம் இருந்து புரட்சி வெடிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.