மதுபான கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்: எஸ்டிபிஐ
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மதுபான கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்த போவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி எஸ்டிபிஐ கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி பல்வேறு பகுதிகளில் பேசி வருகின்றார்.
அவர் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியதாவது,
தமிழகத்தில் கந்து வட்டி, லாட்டரி சீட்டு ஆகியவற்றை தடை செய்த தமிழக அரசு, மதுவை தடை செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்கடை நடத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலி அறுபடக் காரணமாக இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் மூல காரணமாக இருக்க கூடிய மதுவை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தமிழக அரசை பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி வரும் 17ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
அதன் பிறகும் மதுவை தடைசெய்ய தமிழக அரசு தவறும் பட்சத்தில், அனைத்து கட்சிகளையும், பொது மக்களையும் ஒன்று திரட்டி மதுபான கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.