தமிழக மின்வெட்டுக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஜெயலலிதா
தமிழக மின்வெட்டு தொடர்பாக ‘ஜெயா' தொலைக்காட்சியில் ஜெயலலிதா ஆற்றிய உரை:
தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்து இருப்பதை அறிந்து, வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். முதல் கட்டமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார லல்சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இருப்பினும், மின் தொடரமைப்பில் உள்ள நெருக்கடி காரணமாக, மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கியும் தமிழகத்துக்குக் கொண்டு சேர்க்க வழியில்லாத நிலை தான் இப்போதுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரத்தைக் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு மின் வழித்தடப் பாதை தேவை. குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தாலும், வழித்தடப் பாதை சிறியதாக உள்ளதால், 235 மெகாவாட் மின்சாரம் தான் கொண்டு வர முடிந்தது.
மின்வழித் தடப் பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது.
வட மாநிலங்களுக்கு பெரிய அளவில், போதுமான அளவுக்கு மின் வழித் பாதையை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்தகைய பாதையை தமிழகத்துக்கு அளிக்காமல் புறக்கணித்து விட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளாக இடையில் ஒரு ஆண்டைத் தவிர்த்து, திமுக தொடர்ந்து 15 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளது. திமுகவைம்ச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழகத்துக்கு என்ன செய்தார்கள்?
இத்தனை ஆண்டு காலமாக மத்திய அமைச்சர்களாக இருந்த திமுக மற்றும் காங்கிரஸ்காரர்களால், தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு பயனளிக்கக் கூடிய இபாதையை ஏன் அமைத்துத் தர முடியவில்லை? அதற்கு வழியில்லையா? அவர்கள் நினைத்திருந்தால் எப்போதோ செய்து முடித்திருக்கலாம். செய்ய மனமில்லை என்பதுதான் உண்மை.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, பிரதமரிடம் இங்கே இருக்கின்ற மின் பாற்றாக்குறை நிலையை எடுத்துச் சொல்லி, ஓராண்டு காலத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். திரும்பத் திரும்ப இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கேட்டுப் பார்த்தேன்.
ஆனால், மத்திய அரசு வழங்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த மத்திய காங்கிரஸ் அமைச்சர்களோ இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்து பிரதமரிடம் பேசி, இந்த மின்சாரத்தை வழங்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?
தமிழக மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் திமுக மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் தங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு, இதையாவது செய்தார்களா? என்றால் செய்யவில்லையே!
இதனால் தான் இன்று இந்த மின் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைக்கு யார் காரணம்? காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், முந்தைய திமுக அரசும் தான் இதற்கு முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.