மேலூரில் வேகமாகப் பரவும் டெங்கு... காய்ச்சலுக்கு இதுவரை 30 பேர் பலி?
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அங்கு பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். சராசரியாக தினசரி இருவர் அங்கு பலியாகி வருகின்றனர். இதுவரை 30 பேர் வரை அங்கு பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகின்றனர். அரசு இதை மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என்று பெயரிட்டு அழைக்கிறது. டெங்கு என்ற பெயரையே அரசு பயன்படுத்தவும் மறுத்து வருகிறது.
இருப்பினும் பரவி வருவது டெங்குதான் என்று மக்கள் கூறுகின்றனர். இந்தக் காய்ச்சலுக்கு சராசரியாக தினசரி ஒருவர் பலியாகி வருவதாக செய்திகளில் வெளியாகி வருகின்றன. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வல்லாளபட்டி கிராமத்தில் தினசரி யாராவது ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி வருவதால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
மேலூர் சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் 8 வயது குழந்தை முதல் 65 வயது முதியவர் வரை இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் சுகாதாரமின்மைதான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராமங்களில் துப்புறவு நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும், கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் கிராமத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையிலும், மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையிலும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற அச்சுறுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
தாமதமாக விழித்துக் கொண்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்பொழுது மேலூர் சுற்றுவட்டார கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளோருக்கு ஆயுர்வேத மருந்தும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் நோயாளிகள் உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துப்புறவு பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை உயராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications