கோலார் தங்கவயல் சுரங்கங்களில் கூடங்குளம் அணு உலைக் கழிவுகள் சேமிப்பு: மத்திய அரசு தகவல்
டெல்லி: கூடங்குளம் அணு உலையில் வெளியாகும் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள முன்னாள் தங்க சுரங்கங்களில் தேக்கி வைக்க முடிவு செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வழக்கு விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் நாரிமன், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டன. கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முடிவு செய்திருக்கிறது என்றார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அணுக்கழிவுகளை எப்படி சுத்திகரிக்கப் போகிறார்கள், எப்படி சேமிக்கப் போகிறார்கள் என்பது தொடர்பில் அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
42 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீரை கடலில் இருந்து எடுத்து, பயன்படுத்திவிட்டு, அதை மீண்டும் கடலில் விடுவதாக அரசுத் தரப்புக் கூறுகிறது. அவ்வாறு விடப்பட்டால் கடல் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைத்த 17 அம்சங்கள் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? எப்போது இந்த பணிகள் முடிவடையும்? என்பதை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.