டெங்குவுக்கு புதிய மருந்து கண்டுபிடித்த மதுரை அரசு மருத்துவமனை: மருந்தின் பெயர் 'யாகம்'!!
தமிழக மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மட்டும் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றவர்களில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 44 பேர் இறந்துள்ளனர்.
இதனால் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தாங்களும் டெங்குவால் இறந்துவிடுவோமோ என்ற பீதியில் உள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் யாகம் ஒன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் யாகம் நடந்தது.
என்ன தான் சிகிச்சை அளித்தாலும் நோயாளிகள் டெங்கு பயத்தில் இருக்கின்றனர் என்றும், அவர்களின் மன ஆறுதலுக்காகத் தான் இந்த யாகம் நடத்தப்பட்டது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நோயாளிகளின் மன ஆறுதலைக் காரணமாகச் சொல்லிவிட்டு உண்மையிலேயே தனது சொந்த பயம் காரணமாகவே யாகம் நடத்தியுள்ளது மருத்துவமனை அதிகார வர்க்கம். யாகம் நடத்தச் சொல்லி உத்தரவு ஏதாவது வந்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை.