நாங்குநேரியில் பள்ளி வேன் கவிழ்ந்து 33 மாணவர்கள், ஆசிரியர், டிரைவர் காயம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் 33 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
நாகர்கோவில் அருகே அருமனையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி மாணவர்கள் விவசாயம் குறித்த கல்வி கற்பதற்காக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரிக்கு செல்ல இருந்தனர். இதற்காக அப்பள்ளி மாணவ, மாணவிகள் 33 பேர் மற்றும் 1 ஆசிரியர் ஆகியோர் இன்று காலை வேன் மூலம் கிள்ளிகுளத்திற்கு புறப்பட்டனர். வேனை குளத்தூரைச் சேர்ந்த ஜெனட் என்பவர் ஓட்டினார்.
நாங்குநேரி தனியார் நூற்பாலை அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி வேனின் குறுக்கே சென்றது. இதனால் லாரியின் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஜெனட் பிரேக் போட்டார். இதில் வேன் நிலைதடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 33 மாணவர்கள், ஆசிரியர், ஜெனட் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 28 மாணவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து லாரியுடன் தப்பிச் சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications