நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு இலவசமாக சந்தனக் கட்டைகள் வழங்க ஜெ. உத்தரவு
சென்னை: நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு அரசின் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தனக் கட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், 10வது தலைமுறை பரம்பரை ஆதீனம் ஹஸ்ரத் அல்ஹாஜ் எஸ்.எஸ். காமில் சாஹிப் காதிரி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் செய்யதினா செய்யது அப்துல் காதர் ஷாஹுல் ஹமீது நாகூர் தர்கா விளங்கி வருகிறது என்றும், நாகூர் ஆண்டகை அவர்களின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டின் ஜமாத்துல் ஆகிர் மாதத்தில் நடைபெறுகிறது என்று எடுதுக் கூறியுள்ளார்.
மேலும், புனித சமாதியில் சந்தனக்கூடு நாளன்று சந்தனக் கட்டைகள் அரைத்து சந்தனம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சமாதியில் பூசப்படுகிறது என்றும், இந்த சந்தனம் பூசும் விழா மிக மிக புனிதமானது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்விழாவிற்கு புனித சமாதியில் பூசுவதற்காக சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகள், 3 லட்சம் ரூபாய் செலவில் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், புனிதமிக்க ஹஸ்ரத் ஆண்டகை அவர்களின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழாவின்போது புனித சமாதியில் சந்தனம் பூசுவதற்காக வாங்கப்படும் சந்தனக்கட்டைகளை மானியமாக அரசு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
எஸ். எஸ். சையத் காமில் சாஹிப் காதிரியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், நாகூர் ஆண்டகை அவர்களின் பெரிய கந்தூரி விழாவின் சந்தனக்கூடு நாளன்று புனித சமாதியில் பூசும் உபயோகத்திற்காக தேவைப்படும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகளை விலையேதும் இல்லாமல் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.