தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கக் கோரிய பேரணியில் கலவரம்: 61 பேர் காயம், 100 பேர் கைது
பாங்காக்: தாய்லாந்து பிரமதர் இங்லக் ஷினாவத்ராவை பதவியில் இருந்து நீக்கக் கோரி பாங்காக்கில் நடந்த பேரணியின்போது கலவரம் வெடித்ததில் 61 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தாய்லாந்தின் பிரதமர் ஆனார் இங்லக் ஷினாவத்ரா. அவர் பதவிக்கு வந்த புதில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். ஆனல் தற்போது அவரது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் அவர் தனது சகோதரரும், முன்னாள் பிரதமருமான தக்ஷின் ஷினாவத்ராவின் கைப்பாவையாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
இந்நிலையில் இங்லக்கை பதவியில் இருந்து நீக்கக் கோரி நேற்று தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய பேரணி நடந்தது. இதற்கு ஓய்வு பெற்ற ராணுவ தளபதியும், அரச குடும்ப விசுவாசியுமான பிடாக் ஷியாம் குழு தலைவருமான பூன்லர்ட் கீவ்பிராசிட் தலைமை தாங்கினார். பேரணியின்போது போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்.
இந்த கலவரத்தில் 10 போலீசாரும், 51 போராட்டக்காரர்களும் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.