நியூயார்க்கின் 2 மாபெரும் ஹோட்டல்களை வாங்கும் சஹாரா நிறுவனம்
மும்பை: நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் பிளாசா, ட்ரீம் டெளன்டெளன் நியூயார்க் ஆகிய மாபெரும் ஹோட்டல்களை இந்தியாவின் சஹாரா குழுமம் வாங்கவுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 4,400 கோடியாகும்.
சுப்ரத ராய் தலைமையிலான சஹாரா குழுமம் பல்வேறு உலகம் முழுவதும் சொகுசு ஹோட்டல்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் லண்டனில் உள்ள குரோஸ்வேனோர் ஹவுஸ் என்ற பெரும் ஹோட்டலை இந்த நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கின் பிளாசா ஹோட்டலில் 75 சதவீத பங்கை சஹாராவும், 25 பங்கை செளதி இளவரசரான அல்வலீத் பின் தலாலும் வாங்கவுள்ளனர்.
ட்ரீம் டெளன்டெளன் நியூயார்க் ஹோட்டலை விக்ரம் சட்வாலிடமிருந்து சஹாராவே வாங்குகிறது.
நியூயார்க் பிளாசா ஹோட்டலில் அமெரிக்க அதிபர்கள் பலர் வந்து தங்கியுள்ளனர். ஹோம் அலோன் 2, சென்ட் ஆப் எ உமன் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
சுப்ரத ராய்க்கு மும்பையில் 223 அறைகள் கொண்ட சஹாரா ஸ்டார் என்ற 5 நட்சத்திர ஹோட்டலும், ஆம்பி வேலி டவுன்ஷிப்பும் சொந்தமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.