ராஜ் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து.. மீண்டும் பாய்ந்த மகாராஷ்டிர போலீஸ்
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரேவை கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டதற்காக மீண்டும் ஒருவரை மகராஷ்டிரா காவல்துறை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்தபோது மும்பையில் அறிவிக்கப்படாத முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஃபேஸ்புக்கில் மூலம் எதிர்ப்பாக கருத்து தெரிவித்த ஒரே காரணத்துக்காக இரண்டு இளம் பெண்களை மகாராஷ்டிரா உடனே கைது செய்தது. இது நாடு முழுவதும் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பியது. இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, மகாரஷ்டிரா அரசை மிகக் கடுமையாக எச்சரித்து கண்டனக் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து அந்த இரு இளம்பெண்களு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் ஃபேஸ்புக்கில் கருத்து சொன்னதற்காக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டும் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த அமளிதுமளியெல்லாம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு ஃபேஸ்புக் புகார்!
இப்பொழுது மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரேவுக்கு எதிராக சுனில் விஸ்வகர்மா என்ற இளைஞர் கருத்துகளைப் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தானே மாவட்ட நவநிர்மான் சேனா தலைவர் குந்தன் சங்கே போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
உடனே மகாராஷ்டிரா போலீசாரும் பாய்ந்து சென்று பால்கர் பகுதியைச் சேர்ந்த சுனிலை கைது செய்து வந்தது. ஆனால் சுனிலிடம் நடத்திய விசாரணையில் அப்படியான ஒரு அக்கவுன்ட்டை தான் ஃபேஸ்புக்கில் தொடங்கவே இல்லை என்று இப்பொழுது மீண்டும் விழிபிதுங்கியது மகாராஷ்டிரா போலீஸ். ஒரிஜனல் சுனில் விஸ்வகர்மாவை விடுவித்துவிட்டு தற்போது 'டூப்ளிகேட்' அக்கவுண்ட் உருவாக்கிய மர்ம நபரைத் தேடுகிறது மகாராஷ்டிரா போலீஸ்!
அனேகமாக மகாராஷ்டிராவில் ஃபேஸ்புக்குக்கு தடை வந்துவிடுமோ?