அண்ணன் சந்திரசேகர ராவ் மீது தங்கச்சி விஜயசாந்திக்கு அதிருப்தி... மீண்டும் பாஜகவுக்கு தாவுவாரா?
ஹைதராபாத்: அண்ணா அண்ணா என்று தான் வாய் நிறைய அழைத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மீது கட்சி எம்.பியான விஜயசாந்தி அதிருப்தி அடைந்துள்ளாராம். தன்னை ராவ் ஒதுக்கி வருவதாக குமுறும் அவர் கட்சியிலிருந்து விலகலாம் என்று தெரிகிறது.
நடிகையாக, லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி. அவருக்கு இருந்த மாஸ் காரணமாக அவரை பாஜக அரசியலுக்குள் இழுத்தது. 1998ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த அவர் மகளிர் அணி மாநிலச் செயலாளராக செயல்பட்டார். ஆனால் 2005ம் ஆண்டு அதிலிருந்து விலகி தளி தெலுங்கானா என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
ஆனால் தனிக் கட்சியை நடத்த முடியாமல் திணறிய விஜயசாந்தி, 2009ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் தனது கட்சியை இணைத்தார். அப்போது கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது அண்ணன் என்று அவர் கூற, என் அன்புத் தங்கச்சி என்று ராவும் உருகினார்.
2009 லோக்சபாதேர்தலில் மேடக் தொகுதியில் டிஆர்எஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பியானார். அதன் பின்னர் தெலுங்கானா போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கும், ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியதாம்.
அதாவது மேடக் தொகுதியிலிருந்து வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ராவ் திட்டமிட்டுள்ளாராம். இது விஜயசாந்திக்கு முதல் எரிச்சலாக அமைந்ததாம். அதேபோல அவருக்குப் பிடிக்காத ஒருவரை எம்.எல்.சி தேர்தல் வேட்பாளராக ராவ் அறிவித்தது அடுத்த எரிச்சலாம்.
மேலும் ராவ் தன்னை கட்சி நிகழ்ச்சிகளில் ஓரம் கட்டி வருவதாகவும் அவர் நெஞ்சு குமுறிப் போயுள்ளாராம். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த கட்சிப் பேரணியில் விஜயசாந்தி பங்கேற்கவில்லை. இதனால் அவர் கட்சியிலிருந்து விலகப் போவதாக பேச்சு அடிபடுகிறது. மீண்டும் அவர் பாஜகவில் இணையலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரபாகர் கூறுகையில், விஜயசாந்திக்கு எங்களது கதவு திறந்தே இருக்கிறது. அவர் டிஆர்எஸ் கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளார் என்றார் அவர்.
ஆனால் தான் பாஜகவில் சேரப் போவதாக வந்த தகவலை விஜயசாந்தி மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications