பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு நிதி உதவி: ஜெயாபச்சன் அறிவிப்பு
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் சிகிச்சைக்காக ஜெயாபச்சன் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநிலங்களவையில் செவ்வாய்கிழமை கண்டனம் தெரிவித்து பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன் கண்ணீர் விட்டார்.இதனைத் தொடர்ந்து நேற்று அவர் டெல்லி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கில் போலீசுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று போலீஸ் கமிஷனர் உறுதி அளித்தார். எம்.பி. தொகுதி நிதியில் இருந்து அந்த மாணவிக்கு உதவி அளிக்கலாமா? என்று பாராளுமன்ற இலாகாவிடம் கேட்பேன். அதற்கு ஒப்புதல் அளித்தால், அந்த மாணவிக்குத் தேவையான நிதி உதவி வழங்குவேன் என்றும் ஜெயாபச்சன் கூறினார்.