சைபர் குற்றங்களுக்கும் இனி குண்டாஸ் பாயும்: ஜெ அறிவிப்பு
மூன்று நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முடிவில் 343 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
குண்டர் சட்ட நடவடிக்கை
குண்டர் சட்டம் கடுமையாக்கப்படும். குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வதற்கான செலவுத்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும். உணவுப்பொருட்கள் உட்பட கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் போது, அந்த கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும். சைபர் கிரைம் குற்றம் செய்தவர்களும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர்.
சிறைகளில் கண்காணிப்பு
அதிக பாதுகாப்பு கொண்ட சிறை கைதிகளை அழைத்து வரும் போலீசாருக்கான செலவுத்தொகை ரூ.35ல் இருந்து ரூ.100ஆக உயர்த்தப்படுகிறது. சென்னை, ஆயுதப்படை பிரிவுக்கு நிர்வாக கட்டிடம் கட்டப்படும்.
விஐபிக்களுக்கான கான்வாய் வாகனங்கள் மாற்றப்பட்டு, அதிவேக வாகனங்கள் வாங்கப்படும். புழல், வேலூர், கடலூர், சேலம் மத்திய சிறைச்சாலைகளில் பொருட்களை ஸ்கேன் செய்வதற்கான கருவி வாங்க தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
பேரழிவு எதிர்ப்பு பிரிவுக்காக நவீன சாதனங்கள் வாங்க ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் எஸ்பிக்களுக்கு உதவுவதற்காக ஒரு சட்ட அதிகாரி நியமனம். ரூ.42 லட்சம் செலவில் வெடிகுண்டு மோப்ப நாய்கள் பிரிவு விரிவாக்கப்படும். டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி ஆகியோருக்கான நிர்வாக அதிகாரங்களில் மாற்றம் செய்யப்படும்.
குற்றங்களை தடுக்க நடவடிக்கை
மேலும், குற்றத்தை தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் காவல்துறைக்கும் சிறைத் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேடப்படும் குற்றவாளிகளின் ஒளிப்படங்களை சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பும்படி, மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறைத் துறை கண்காணிப்பாளர்களுக்கும், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் இடையேயான கூட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபடுவோர் சிறைகளை புகலிடமாக பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்திருப்பதால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தர்மபுரியில் தொழிற்பேட்டை
தர்மபுரி கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 99 புதிய வீடுகள் கட்டித் தரப்படும். தர்மபுரியில் நக்சலைட்டுகள் இல்லாத 32 கிராமங்களுக்கு ரூ.20 கோடியில் வளர்ச்சி திட்டங்கள், சிப்காட் தொழிற்பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
பள்ளிகளில் அறிமுகம்
பள்ளி படிப்பிலேயே சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது தொ டர்பான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். அனைத்து அரசு பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அறைகளில் இந்தியா, தமிழகம், மாவட்ட வரைபடங்கள் வைக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ , மாணவிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை முழுவதையும் வழங்குவதையும், கல்வி உதவித்தொகை வழங்குவதையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கவனிக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கான படிப்பு உபகரணங்கள், பைகள் ஆகியவை ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ளது. அந்த சாதனங்களின் தரத்தை உறுதிப்படுத்தி சரியான வகையில் மாணவர்களுக்கு வழங்க கலெக்டர்கள் முன்வர வேண்டும்.
பொதுமக்களுக்கான இந்த திட்டங்களை ஒவ்வொரு மூத்த அதிகாரிகளும் மாதம் ஒருமுறை கள ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் மாதம் ஒருமுறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.