பலாத்கார சம்பவம்: போராட்டத்தைத் தடுக்க 144 தடை உத்தரவு! 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் உச்சகட்டமாக நேற்று காலை 9 மணி முதல் ராஷ்டிரபதி பவனை முற்றுகையிட்டு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. பல முறை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். ஆனால் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து நகரவில்லை. நேற்று இரவு 7 மணி வரை பார்லிமெண்ட் வளாகம், ராஷ்டிரபதி பவன் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் போராட்டக்காரர்கள் வசமே இருந்தது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும் கொட்டும் பனியிலும் நீதிகோரி 60 பேர் இந்தியா கேட் அருகே போராட்டம் நடத்தினர். அவர்களை அதிகாலையில் போலீசார் அப்புறப்படுத்தி பேருந்து ஒன்றில் ஏற்றி அனுப்பினர்.
இன்று அப்பகுதியில் போராட்ட நடைபெறுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா கேட் மற்றும் ராஷ்டிரபதி பவனை உள்ளடக்கிய விஜய் சவுக் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் இந்தியா கேட் பகுதி உள்ளிட்ட 7 மெட்ரோ ரயில் நிலையங்களும் காலவரையிற்னி மூடப்பட்டிருக்கின்றன. இதனால் டெல்லியில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications