சுனாமி நினைவலைகள்: தமிழ்நாடு புதுச்சேரியில் 8ம் ஆண்டு நினைவஞ்சலி
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இந்தியா, இலங்கை கடலோரப் பகுதிகளில் ஆழிப்பேரலை தாக்கியது. இதில் லட்சக்கணக்கனோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமி அலைகளில் சிக்கி உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் உடமைகளை இழந்தனர்.
சுனாமி தாக்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஏராளமானோர் பெற்றோர்களை இழந்துவிட்டனர். பெரும்பாலான மக்கள் பிள்ளைகளை இழந்துவிட்டனர். இன்று சுனாமி நினைவு தினம் என்பதால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடற்கரையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் பால் எடுத்து வந்த உறவினர்கள் கடலில் ஊற்றி தங்களின் உறவினர்களை நினைத்து அழுதனர். பின்னர் கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் சுனாமி நினைவுத்தூண் அருகே கூடிய மக்கள் பூக்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபட்டனர். பின்னர் கடலில் பால் ஊற்றி கண்ணீர் விட்டு அழுதனர்.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. மேலும் மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு, கன்னி யாகுமரியில் மவுன ஊர்வலமும், அஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மேல மணக்குடி புனித மாதா ஆலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து சுனாமியில் பலியானவர்கள் புதைக்கப்பட்ட நினைவிடத்துக்கு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் கொட்டில்பாடு கே.எஸ்.எஸ்.எஸ். காலனியில் இருந்து இன்று காலை மவுன ஊர்வலம் தொடங்கியது. 199 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியை ஊர்வலம் அடைந்ததும் அங்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதை ஒட்டி மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.