அண்ணாநகர் வால்மார்ட் ஆபீஸ் முற்றுகை: போலீஸ் தடியடி- சிபிஎம், சிபிஐ தலைவர்கள் உள்பட 1,000 பேர் கைது
சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள வால்மார்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன், எம்.எல்.ஏ.க்.கள் சவுந்தர்ராஜன், பீமாராவ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 1,000க்கும் மேற்பட்டோர் அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் கூடினர்.
அங்கிருந்து ஊர்வலமாகக் கிளம்பிய அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு வி்ட்டு ஊர்வலத்தை தொடர்ந்தனர். வால்மார்ட் கிளை அலுவலகத்தை அடைந்ததும் அதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தின் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்களோ அடியை வாங்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து வால்மார்டுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்ப மறுத்ததும் மேற்கு மண்டல இணை கமிஷனர் சக்திவேல், அண்ணாநகர் துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான், வில்லிவாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அப்படியும் அங்கிருந்து கலைந்து போவதாக இல்லை. இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டு திருமங்கலத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.