ஜெயலலிதா பிரதமராகி இந்தியாவே இருளில் மூழ்க வேண்டுமா?: கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து திமுக சார்பில் இன்று தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திமுக எம்.பி. கனிமொழி நேற்று இரவு விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.
அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பும் முன் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தூத்துக்குடியில் 7ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் நடக்கும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருக்கிறேன். தூத்துக்குடி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுப்பையாவை போலீசார் ஒழுங்காக கண்காணிக்கவில்லை.
போலீசாருக்கு குற்றவாளிகள் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. பேருந்து வசதியே இல்லாத இடத்தில் இருந்து பெண்கள் கல்வி கற்க செல்ல வேண்டிய கடுமையான சூழல் உள்ள நிலையில் கல்வித்தரம் எங்கிருந்து முன்னேறும். சென்னையில் வினோதினி என்ற பெண் மீது ஆசிட் ஊற்றியுள்ளனர். மேலும் சேலத்தில் வேலைக்கார பெண்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இது தவிர விருத்தாச்சலம் அருகே நண்பருடன் சென்ற பெண் சீரழிக்கப்பட்டுள்ளார். இது போன்று பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரிக்க தமிழக அரசின் அணுகுமுறை சரியில்லை என்பது தான் காரணம். டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு,
கேள்வி: திமுக மரண தண்டனை கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமா?
பதில்: மரண தண்டனை கோரிக்கையை திமுக ஏற்றுக்கொள்ளாது. பெண்களுக்கு அடிப்படையில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கேள்வி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?
பதில்: அப்படி ஒன்று இருக்கிறதா என்ன. போலீசார் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
கேள்வி: ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளர் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே?
பதில்: தமிழகம் போதாது என்று இந்தியாவே இருளில் மூழ்க வேண்டுமா?
பேட்டிக்கு பிறகு அவர் கார் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார்.