கொலையான தூத்துக்குடி மாணவிக்கு கூடுதல் நிதி வழங்குக: கனிமொழி வலியுறுத்தல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பலாத்கார முயற்சியில் கொலையான பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு அதிக அளவில் நிதி வழங்கவேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி புனிதா கடந்த 24-ந்தேதி பள்ளிக்கு செல்லும் வழியில் கொலையுண்டு கிடந்தார். இது தொடர்பாக ரவுடி சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்வேறு கட்சியினரும் மாணவி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவியும் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மாணவர் அணி சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற கனிமொழி, மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னதாக கனிமொழி, கிளாக்குளத்தில் உள்ள மாணவி புனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.