பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி 3 கட்ட நடைபயணம்: வைகோ அறிவிப்பு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 12ந் தேதி நெல்லை மாவட்டம் உவரியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொண்டார்.
மொத்தம் 14 நாட்கள் 450 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட வைகோ வழியில் 510 கிராமங்களில் மதுவினால் ஏற்படும் தீமையையும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம் மதுரை மேலமாசிவீதிதெற்கு மாசிவீதி சந்திப்பில் நேற்று இரவு நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
மதுவின் பிடியில் இளைய சமுதாயம் சிக்கி விழுந்து விடக்கூடாது, ஒழுக்க சிதைவுகளுக்கு இளைஞர்கள் ஆளாகக்கூடாது, தமிழர் சமுதாயத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடைபயணம் நடந்தது.
1971ம் ஆண்டு ராஜாஜி, கோபாலபுரத்திற்கு நேரில் சென்று அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து மதுவை திணிக்காதீர்கள், அந்த திட்டத்தை உடனே கைவிடுங்கள் என்றார். ஆனால் கருணாநிதி மறுத்து விட்டார். அப்போது வந்த மது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழகத்தில் 26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் மதுவினால் வருகிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மதுவினால் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடி மேல் வருமானம் வருகிறது. வாரத்திற்கு 500 புதியவர்கள் மது குடிக்க வருகிறார்கள் என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறார். அரசு திட்டங்கள் செயல்படுத்த அதிக பணம் செலவாகிறது என்கிறார்கள்.
மக்களை வாட்டி வதைக்கும் அரசு திட்டங்கள் எதற்கு? குஜராத் மாநிலத்தில் மதுக்கு அனுமதி இல்லை. அங்கு தொழில் பெருகவில்லையா, பொருளாதாரம் பெருகவில்லையா. காமராஜர் காலத்தில் மது இல்லை. ராஜாஜி காலத்தில் மது இல்லை.
மது இருந்தால் இனி பெண்கள் தெருவில் போக முடியாது. உலகில் அதிக விபத்து எங்கு நடைபெறுகிறது தெரியுமா? தமிழ்நாட்டில் தான். இதற்கு காரணம் மிதமிஞ்சிய மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால்தான். கர்ணன் வேண்டுமானால் கவசத்தை கழற்றி கொடுக்க முடியும். ஆனால் என்னால் நேர்மை என்ற கவசத்தை கொடுக்க முடியாது. இளைய தமிழர்கள் பாழாகி விடக்கூடாது. சின்ன பிஞ்சுகள் வாடிவிடக் கூடாது என்றுதான் இந்த நடைபயணம்.
இந்த பயணம் இதோடு முடியவில்லை. மீண்டும் பிப்ரவரி 18ந் தேதி தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் தொடங்கி, 28ந் தேதி மறைமலைநகரில் முடிவடையும். அதே போன்று ஏப்ரல் 9ந் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி 20ந் தேதி ஈரோட்டில் நிறைவடையும். அதனை அடுத்து ஜூன் மாதம் 20-ந் தேதி விழுப்புரத்தில் தொடங்கி 30ந் தேதி கடலூரில் நிறைவடையும் இவ்வாறு வைகோ பேசியுள்ளார்.