கோவை புரோக்கரிடம் ரூ.28,000 கோடி அமெரிக்க பத்திரங்கள் பறிமுதல்!!
மத்திய நிதியமைச்சகத்தின் உளவுப் பிரிவான Financial Intelligence Unit கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்ட் நடத்தப்பட்டது.
அப்போது ரூ. 28,000 கோடி அளவுக்கு அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டதற்கான பங்குகளின் ஆவணங்கள் சிக்கியபோது வருமான வரித்துறை அதிகாரிகளே மலைத்துவிட்டனர். ஒரு தனி மனிதர் இவ்வளவு பெரிய அமெரிக்க முதலீடு செய்தது எப்படி என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலமாக இவர் அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். மிகப் பெரிய அளவில் இவர் கோடிகளை அமெரிக்காவுக்கு டிரான்ஸ்பர் செய்ததால் அதிர்ந்துபோன வங்கி நிதித்துறை உளவுப் பிரிவுக்குத் தகவல் தந்தது. இதையடுத்தே இந்த ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி இந்த ஆவணங்களைக் கைப்பற்றினர். முதல் கட்ட விசாரணையில் இந்தப் பங்குப் பத்திரங்கள் உண்மையானவை என்றே தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் அமெரிக்கத் தூதரகத்தின் உதவியை வருமான வரித்துறை நாடியுள்ளது.
ஒரு இந்தியர் அதிகபட்சமாக ரூ. 1 கோடியை (2 லட்சம் டாலர்) மட்டுமே அன்னிய கரன்சியை வைத்திருக்க முடியும். அதையும் கூட அவர் வெளிநாட்டில் தான் பணமாக வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு வரும்போது அதை இந்தியப் பணமாக மாற்றி, கணக்குக் காட்ட வேண்டும்.
அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் எந்த நாட்டைச் சேர்ந்தவர் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்கிறது அமெரிக்கா. ஆனால், இந்திய சட்டப்படி இங்கிருந்து பணத்தை அனுப்பி முதலீடு செய்ய முடியாது. இது போன்ற முதலீடுகளால் நமது அன்னிய செலாவணி வெளிநாடுகளுக்குப் போவதைத் தடுக்கவே இந்த சட்டத்தை இந்தியா வைத்துள்ளது.
ஆனால், அதையும் மீறி இந்த புரோக்கர் எப்படி இவ்வளவு பணத்தை அமெரிக்க அரசின் கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்தார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரூ. 28,000 கோடியும் இவருடையதாக இருக்க முடியாது.
இவர் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும் முதலைகள் தான் அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர்கள் யார் யாரோ?. விசாரணை நடக்கிறது. ஆனால், பெயர்கள் வெளி வருமா?.