லோக்சபா தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிட தடை?.. தேர்தல் ஆணையர் சம்பத் நம்பிக்கை!!
டெல்லி: 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியுள்ளார்.
குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. தற்போது மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் சிலர் மீது கொலை ,ஆட்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புகார் வந்துள்ளன. இவர்களில் சிலர் மீது வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
"சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்தே தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன்படி கிரிமினல் குற்றவாளிகள் கோர்ட் மூலம் 5 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் காலத்திற்கேற்ப அரசுகள் மாறி வருவதால் அந்த கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வந்தது.
தற்போது இந்த கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருவதால் , கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , மாநில சட்டசபை, பாராளுமன்ற லோக்சபா தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.எனவே வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் நி்ச்சயம் போட்டியிட முடியாது என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.