''பிரதமர் பதவி.. நரேந்திர மோடி; பிரதமர் பதவி.. நரேந்திர மோடி''.. வாயை மூடச் சொல்லும் ராஜ்நாத்!
டெல்லி: பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜகவினர் யாருக்கும் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு சில மணி நேரங்களில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களான மேனகா காந்தி, சத்ருகன் சின்ஹா, சிபி தாகூர், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் பாஜக வாய் திறக்க முடியாத நிலையில் உள்ளது. மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அக் கட்சியில் குரல்கள் வலுப்பட்டாலும் அதை மிகக் கடுமையாக எதிர்க்கிறது கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.
மோடி தான் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்தால் அந்தக் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறுவது நிச்சயம். இதே போல சிவசேனாவும் மோடியை ஆதரிக்கத் தயாராக இல்லை.
இதனால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்குமாறு ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் வேட்பாளரை கட்சியின் மத்திய நிர்வாகக் குழு தான் முடிவு செய்யும். இது குறித்து யார் பேசலாம், யார் பேசக் கூடாது என்பதையும் இந்தக் குழு தான் முடிவு செய்யும். இதனால் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாது. இது தான் எனது கடைசி கோரிக்கை. இனியும் இதுபோல கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன் என்று மிரட்டல் தொணியில் கூறியிருந்தார்.
அவர் இவ்வாறு பேசிய அடுத்த சில மணி நேரத்திலேயே, நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களான மேனகா காந்தி, சத்ருகன் சின்ஹா, சிபி தாகூர், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா, பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் யஷ்வந்த் சின்ஹாவை நான் ஆதரிக்கிறேன். அவர் சொல்வது போல பிரதமர் பதவிக்கு மோடி தான் சரியானவர் என்றார்.
ராஞ்சியில் நிருபர்களிடம் பேசிய மேனகா காந்தி, மோடி தான் மிகச் சிறந்த பிரதமராக இருக்க முடியும் என்றார்.
இந் நிலையில் மோடி தரப்பின் நெருக்கடிக்கு பணிந்து பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் மோடியையும் மத்தியப் பிரதேச முதல்வர் பிருதிவிராஜ் செளஹானையும் சேர்க்க அக் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.