வர்மா கமிட்டியின் 'ஆலோசனைகளை' நிராகரிக்கலையே...ப.சிதம்பரம் விளக்கம்
டெல்லி: பலாத்கார குற்றத்துக்கான தண்டனைகளாக நீதிபதி வர்மா கமிட்டி அளித்த ஆலோசனைகளை நிராகரிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டப்பிரிவுகளை நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்திருந்தது. அவற்றில் பல்வேறு யோசனைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், அவற்றை அவசரச் சட்டத்தில் சேர்க்கவில்லை என்றும் பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கியிருந்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியரசுத் தலைவரும் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு, விவாதிக்கப்படும். அதன்மீது விரிவான கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர் சட்டம் இயற்றப்படும். புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும் வரை குற்றவாளிகளுக்கு அவசரச் சட்டம் தடையாக விளங்கும். வர்மா கமிட்டியின் அனைத்துப் பரிந்துரைகளும் அவசரச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும் அதன் எந்த ஆலோசனையும் நிராகரிக்கப்படவில்லை.
குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் வயது வரம்பைக் குறைப்பதற்கு சிறுவர் நீதிச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதைப் பொருத்துவரை, இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்குத் தனி மசோதாவும் தேவைப்படும். இதேபோல், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தம் செய்வதிலும் இதுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications