அட்டாக் பாண்டியை ‘அட்டாக்’ செய்ய தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள போலீஸ்
மதுரையில் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கடந்த 31ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதில் தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், நாகமுருகன் உள்பட 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நந்தம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் அட்டாக் பாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவருடன் 5 பேர் கொண்ட நெல்லையை சேர்ந்த கூலிப்படையினரும் பதுங்கி உள்ளதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷ்க்கும் தொழில் போட்டி உள்பட பல்வேறு விவகாரங்களில் மோதல் இருந்ததாகவும் இதனால் ஒருவரை ஒருவர் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்காக பொட்டு சுரேஷ் ஒரு கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் வழங்க முன் வந்ததாகவும், அதே கூலிப்படையினருக்கு ரூ.25 லட்சம் வழங்கி அட்டாக் பாண்டி முந்திக் கொண்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நெல்லை, தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் முகாமிட்டு அவரை உள்ளூர் போலீசார் உதவியுடன் பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். 19 வழக்குகளில் தொடர்புடைய அட்டாக் பாண்டியை பிடிக்க முயலும் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவரையும், அவருடன் உள்ள கூலிப்படையினரையும் சுட்டு பிடிக்க போலீசாருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.