ரஜினி இங்க வரணும்…. ஆம்பூர் போலீஸ் ஸ்டேசனில் பெண் அடம்!
வேலூர் : நடிகர் ரஜினிகாந்த் தன்னை வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று வேலூர் மாவட்டம் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் நளினி. இவர் திங்கட்கிழமை காலை ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டர் யுவராணியிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் என உறவினர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு தமிழகம் முழுவதும் எனக்கு சொத்து உள்ளது என்றும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே ரஜினிகாந்த், இங்கு வந்து தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை பார்த்த இன்ஸ்பெக்டர் யுவராணி அதிர்ச்சியடைந்தார். அவருக்கு என்ன செய்யதென்று தெரியாமல், பின்னர் புகார் பற்றி நளினியிடம் விசாரணை நடத்தினார்.
அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு போகுமாறு காவல் நிலையத்தில் இருந்த போலீசார் கூறினர். ஆனால், ரஜினிகாந்த் இங்கு வரும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று கூறி நளினி அடம் பிடித்தார். நேற்று முழுவதும் போலீஸ் நிலையத்தில் இருந்தார். இந்த வினோத போராட்டத்தால் போலீசார் படாதபாடுபட்டனர்.