பின்லேடன் ஊரில் பொழுதுபோக்குப் பூங்கா.. பாக். அரசு முடிவு
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட அபோதாபாத் நகரில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய பொழுது போக்குப் பூங்காவை அமைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாம்.
பின்லேடன் ஊர் என்ற அவப் பெயரை இந்த பொழுதுபோக்குப் பூங்கா நீக்கும் என்பது பாகிஸ்தான் அரசின் எண்ணம்.
உலகம் முழுவதும் பின்லேடனை அமெரிக்கா வலை வீசி தீவிரமாக தேடி வந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகருக்கு மிக அருகே அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தான் லேடன். அவனை கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க கடற்படை வீரர்கள் அதிரடியாக சுட்டுக் கொன்று பிணத்தையும் கைப்பற்றி எடுத்துச் சென்று பின்னர் கடலில் புதைத்து விட்டனர்.
பின்லேடன் தங்கியிருந்த பெரிய வீடு பின்னர் மக்கள் வந்து பார்த்துச் செல்லும் காட்சிப் பொருளானது. ஆனால் அதை தற்போது பாகிஸ்தான் அரசு இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது.
தற்போது அபோதாபாத் நகரை அனைவருமே பின்லேடன் ஊர் என்றுதான் அழைத்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு தர்மசங்கடமாக உள்ளது. அதேசமயம், அபோபாத் நகரின் பெயரை மாற்றியமைக்கும் வகையில் அங்கு பிரமாண்ட பொழுதுபோக்குப் பூங்காவை அமைக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. ரூ.150 கோடியில் இது அமைகிறதாம்.
5 ஆண்டுகளில் இது முடிக்கப்படும் என்று பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் சையத் அகில் ஷா தெரிவித்துள்ளார்.