இனியாவது திருந்த வேண்டும்... மத்திய அரசு, ராஜபக்சேவுக்கு கருணாநிதி 'அட்வைஸ்'
திருச்சி சென்ற கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும்:
செய்தியாளர்: இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். இதை முன்பே கூறியிருக்கலாம் அல்லவா?
கருணாநிதி: இலங்கை தமிழர் பிரச்சினையில் நான் மட்டும் அல்ல. இலங்கை தமிழர் மீது அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் இலங்கை அரசின் தவறை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று பலமுறை எடுத்துக்கூறி உள்ளனர்.
செய்தியாளர்: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியே வரவேண்டும் என்று கூறி உள்ளாரே?
கருணாநிதி: நாங்கள் வெளியே வந்தால் அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கிறார்கள்.
செய்தியாளர். ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சிகளும் போராட்டம் அறிவித்து உள்ளதே
கருணாநிதி: தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத்தமிழர்களும், தமிழகத்து தமிழர்களும், இந்திய நாடும் சிங்கள அரசின் போக்குக்கு விட்டுவிடமாட்டார்கள் என்பதை உணர்ந்து ராஜபக்சேவும், மத்திய அரசும் திருந்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.