காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு?
டெல்லி: தமிழகத்திற்கு 2.44 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு விவசாயத்திற்கு 2.44 டிஎம்சி தண்ணீர் போதும் என்று நேற்று முன்தினம் மாலை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தது. இதையடுத்து தமிழகத்திற்கு 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நேற்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் நீர்பாசனத் துறை அமைச்ரசர் பசவராஜ் பொம்மை ஆகியோர் நேற்று மாலை டெல்லி சென்றனர். காவிரி பிரச்சனை வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாரிமன் வீட்டுக்கு சென்று அவர்கள் அவரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
அதன் பிறகு ஷெட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் அதில் மாநில அரசின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பல்லிகுண்டுலுவை கணக்கிட்டு தண்ணீர் திறந்துவிடும் வகையில் உத்தரவை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஷெட்டர் நாரிமனுடன் ஆலோசனை நடத்தியாக கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இது குறித்த கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வகைக்கும் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும். அதனால் அது குறித்த நடவடிக்கை எடுங்கள் என்று ஷெட்டரிடம் நாரிமன் அறிவுறுத்தியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.