விஷமப் பேச்சு - விஎச்பி தலைவர் டொகாடியா மீ்து வழக்கு
முதலில் இந்தப் பேச்சு குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் டொகாடியாவின் பேச்சு கலவரத்தைத் தூண்டும் வகையிலானது, இனவெறியுடன் கூடியது, துவேஷப் பேச்சு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது மகாராஷ்டிர அரசு.
கடந்த வாரம் நான்டெட் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய டொகாடியாவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். டொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கும் டொகாடியா பேச்சைக் கண்டித்திருந்தார்.
அவர் கூறுகையில், நான்டெட் நகருக்கு அருகில் உள்ளது ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம். அங்கு பேசிய அக்பருதீன் ஓவைசி துவேஷமாக பேசியதாக ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளது. இதை வரவேற்கிறேன். அதேசமயம், டொகாடியாவை ஏன் மகாராஷ்டிர அரசு விட்டு வைத்துள்ளது என்பது விளங்கவில்லை.
மத துவேஷம் என்பது இந்து மதத்திலிருந்து வந்தாலும் சரி, இஸ்லாமிலிருந்து வந்தாலும் சரி இரண்டுமே தவறுதான். ஒவைசிக்கு ஒரு நியாயம், டொகாடியாவுக்கு ஒரு நியாயம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. உடனடியாக டொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஒவைசி மீது ஆந்திர காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது போல, மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு டொகாடியா மீது நடவடிக்கை எடுக்காதது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தற்போது அவசரம் அவசரமாக டொகாடியா மீது முதல் தகவல் அறிக்கையா நான்டெட் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் எப்போதுமே பாரபட்சம்தான்
மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு எப்போதுமே பாரபட்சமாக நடந்து கொள்வதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக பால் தாக்கரே குடும்பத்தினர் என்ன பேசினாலும், செய்தாலும் அதை மகாராஷ்டிர அரசு பெரிதாக கண்டு கொள்ளாது. அதேபோல பிரவீன் டொகாடியா போன்றவர்கள் எது செய்தாலும் அதையும் கண்டு கொள்ளாது.
ஆனால் பேஸ்புக்கில் சாதாரணமான முறையில் கமென்ட் தெரிவித்த அப்பாவி இளம் பெண்ணையும், அதற்கு லைக் கொடுத்த இளம்பெண்ணையும் போலீஸார் எவ்வளவு வேகத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை சுட்டிக் காட்டி மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு செயல்படும் லட்சணம் இதுதான் என்று விமர்சகர்கள் கண்டிக்கிறார்கள்.
ஓவைசி தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் டொகாடியா அதைக் கூட செய்ய மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் பேசியது நியாயம் என்பதைப் போல அவர் தொடர்ந்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.