நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்: ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் 65 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளையொட்டி, இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணமக்களுக்கு 65 வகையான சீர்வரிசை பொருள்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். திருமணத்தை நடத்தி வைத்த பின், முதல்வர் ஜெயலலிதா மண மக்களை,, அன்பும், அறனும், நல்ல செயலும் இருந்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சி தரும் என்று வாழ்த்திப் பேசினார்
தமிழக அரசுக்கு சாதகமான மத்திய அரசு
வாழ்த்துரைக்குப் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவுக்கு ஆதரவாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் செயல்படுகின்றன. காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை. கேபிள் டிவி டிஜிட்டல்மயமாக்குவதிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. எனவே தமிழக மக்களின் குறைகளை கேட்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றும், அதை நிறைவேற்றுவதே தமது குறிக்கோள்.
செல்வாக்கு இல்லாத கட்சிகள்
தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. எனவே அதிமுகவினர் சிறப்பாக பணியாற்றி, வரும் மக்களவைத் தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், அதிமுகவே வெற்றி பெற்று வாகை சூட பாடுபட வேண்டும். இதன் மூலம், தமிழக அரசுக்கு நன்மை அளிக்கும் ஒரு அரசை மத்தியில் கொண்டு வர முடியும் என்றார்.