ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் எதிரொலி: இத்தாலி நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து?
இதுதொடர்பாக விசாரிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் சிபிஐ குழு ஒன்று நாளை இத்தாலிக்குப் பயணமாகிறது.
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டது இப்போது நாடு தழுவிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் பெற்ற இத்தாலி நிறுவனம் இதுகுறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சி.பி.ஐ. மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு நாளை இத்தாலிக்கு செல்கிறது. இந்தக் குழு இத்தாலிய வழக்கறிஞர்களை சந்தித்து இந்த வழக்கின் விவரங்கள் குறித்து கேட்டறிய உள்ளது. ஆனால் இந்த வழக்கில் முடிவு கிடைக்க வேண்டுமென்றால், அது இத்தாலிய அரசு மற்றும் நிறுவனம் தரும் ஒத்துழைப்பிலேயே உள்ளது.
ஏற்கனவே விமானப்படை கமாண்டர் தலைமையில் ஒரு குழுவை பாதுகாப்புத் துறை நேற்று அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா குடும்பமும் இழுக்கப்படுவதால், சர்ச்சைகளைத் தவிர்க்க இந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்யவும் அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.