உள்துறை அமைச்சர் ஷிண்டே மருமகன் காரை 'சுட்ட' திருடர்கள்... மும்பையில் பரபரப்பு
மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மருமகனுடைய காரை திருடி விட்டனர். இதனால் மும்பையில் பரபரப்பு நிலவுகிறது.
மும்பை போலீஸாருக்கு பெரும் சோதனைக் காலம் போலும். ஏற்கனவே கார் திருட்டு வழக்குகளைத் தீர்க்க முடியாமல் திணறிக் கொண்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் மருமகனுடைய சொகுசுக் காரை யாரோ ஆட்டையைப் போட்டு விட்டனர். இதனால் மும்பை குற்றப் பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் குதித்துள்ளனர்.
மும்பையில் 3000க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். அதில் இதுவரை 20 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளே தீர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஷிண்டே மருமகன் காரை யாரோ ஆட்டையைப் போட்டு விட்டனர். இதனால் மும்பை போலீஸார் ஆடிப் போயுள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்க தற்போது மும்பை குற்றவியல் போலீஸாரையும் களத்தில் இறக்கியுள்ளனர். வழக்கமாக இவர்கள் கொலை வழக்கை மட்டுமே விசாரிப்பார்கள். ஆனால் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமல்லாமல், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் என்பதாலும் விசேஷமாக இவர்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளதாம் மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு.
மத்திய மும்பையில் டெலிஸ்லே சாலையில், நிறுத்தப்பட்டிருந்தது ஷிண்டே மருமகன் ராஜ் ஷ்ராபுக்குச் சொந்தமான கார். அதைத்தான் யாரோ நேற்று இரவு சுட்டுவிட்டனர். ஷிண்டேவின் மகள் ப்ரீத்தியைத்தான் கட்டியுள்ளார் ஷ்ராப்.
சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போய் விட்ட மிட்சுபிஷி பஜேரோ காரைத் தேடி வருகிறார்களாம்.