மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
பொள்ளாச்சி: கல்லூரி மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்கக் கூடாது என்று கோவை மாவட்ட எஸ்.பி. உமா கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்த குற்றத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது எஸ்.பி. உமா கூறுகையில்,
இணையதள மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களிடம் அடையா அட்டையை கேட்டுப் பெற வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின் வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் வாடிக்கையாளர்களின் செல் போன் எண்கள் மற்றும் முகவரிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அனைத்து இணையதள மையங்கள் மற்றும் செல்போன் விற்பனை மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும். அங்குள்ள தடுப்பறைகள் வெளியில் இருந்து ஆட்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளை இணையதள மையங்களுக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் உடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். அதுவும் திறந்த வெளியில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை பார்க்காத வகையில் சாப்ட்வேர்களை பொருத்த வேண்டும். இணையதள மையங்களில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆபாச படங்களை பதிவு செய்வது குற்ற நடவடிக்கையாகும். ஆபாச படங்களை பதிவு செய்து கொடுப்பவரும் குற்றவாளிதான். எனவே இவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.
செல்போன் கடைகளில் புதிதாக சிம் கார்டு கேட்டு வருபவர்களிடம் நிலையான இருப்பிட முகவரி, தொலை பேசி எண் உள்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற வேண்டும் என்று பல்வேறு யோசனைகளை அவர் தெரிவித்தார்.