மோடி மீதான விமர்சனம்- கட்ஜூவுக்கு அருண்ஜேட்லி எதிர்ப்பு- திக்விஜய்சிங் கண்டனம்!
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ கட்டுரை எழுதியதை அருண்ஜேட்லி விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
குஜராத் கோத்ரா கலவரம் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்த கட்ஜூ, கோத்ராவில் என்ன நடந்தது என்பது இப்போதும் மர்மமாகவே உள்ளது. 2002-ம் ஆண்டு சம்பவங்களில் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவது நம்புவதற்கு கடினமாக உள்ளது என்று கூறியிருந்தார். மேலும் ஜெர்மனியில் 1933-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் ஹிட்லரின் நாஜிக் கட்சியைத் தவறாக தேர்வு செய்தனர். அதேபோன்ற தவறை நமது மக்களும் செய்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி, மோடி குறித்து கட்ஜு எழுதியுள்ள கட்டுரை தனிப்பட்ட முறையில் பகைமையோடு விமர்சிப்பதாக உள்ளது. அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களையும்விட அதிக விசுவாசமாக செயல்படுகிறார்.காங்கிரஸ் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களான குஜராத், பிகார், மேற்கு வங்கம் என தேர்வு செய்து கட்ஜு விமர்சிக்கிறார். ஆகையால் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து கட்ஜு உடனடியாக விலக வேண்டும். என்று சாடியிருந்தார்.
அருண்ஜேட்லிக்கு பதிலடியாக, தாம் ஒருபோதும் காங்கிரஸ் சார்பாக நடந்து கொண்டது இல்லை என்றும் உண்மைகளை மறைத்து தவறான தகவல்களைக் கொடுத்து வரும் ஜேட்லிதான் அரசியலைவிட்டு விலக வேண்டும் என்றும் கட்ஜூ காட்டம் காட்டியிருக்கிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வுக் காலத்தில் மாற்றுப் பதவிகள் கொடுப்பது என்பது மத்திய சட்ட அமைச்சர் பொறுப்பு வகித்த ஜேட்லி காலத்திலும்தான் நடந்தது என்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமக்கு மட்டுமே அப்படியான ஒரு பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்றும் கட்ஜூ பதிலளித்திருக்கிறார்.
ஜேட்லிக்கு திக்விஜய்சிங் கண்டனம்
இதனிடையே மார்க்கண்டேய கட்ஜூவை விமர்சித்திருக்கும் அருண்ஜேட்லிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கட்ஜூ எழுதிய கட்டுரை உண்மைகளின் அடிப்படையிலானது. ஆனால் ஜேட்லியோ கட்ஜூக்கு எதிராக மிக மோசமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கக் கூடிய கட்ஜூ, பெய்ட் நியூஸ் பற்றி கேள்வி எழுப்பக் கூடாதா என்ன? ஓய்வு காலத்தில் பிரபல நீதிபதிகளுக்கு பொறுப்புகள் கொடுப்பது எவருக்கும் எதிராக செயல்படுவதற்கு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.