காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு!!
இதன் மூலம் எந்தக் காரணத்தைக் கூறியும் இனிமேல் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடக அரசு கூற முடியாது. எப்பாடுபட்டாவது தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் தந்தே தீர வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பு தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு:
கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று இது அரசிதழில் வெளியானது. காவிரி நடுவர் மன்றம் விசாரித்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அரசாணையின் நகல் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கும் அரசாணையின் நகலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்துக்கு 419 டிஎம்சி-கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி:
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், காவிரியில் தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீரும், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதால், நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்குள் வெளியிட கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்:
இன்றைக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாகும். இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்காமல் இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அரசிதழில் தீர்ப்பு வெளியானது.
இனி இறுதித் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணத்தையும் கூறி தண்ணீரை அது மறுக்க முடியாது.
இடைக்காலத் தீர்ப்பை வைத்து ஏமாற்றிய கர்நாடகம்
தற்போது நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தண்ணீர் கொடுத்து, அதையும் கூட முறையாகக் கொடுக்காமல் டபாய்த்துக் கொண்டுள்ளது கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நேற்றிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசிதழில் வெளியிடும் அறிவிக்கையை மத்திய அரசு பிப்ரவரி 19ம் தேதி பிறப்பித்துள்ளது. கெஜட்டில் வெளியிடவும் அனுப்பி வைத்துள்ளது. இதை 20ம் தேதி பொதுமக்கள் பார்வையிட முடியும் என்று தெரிவித்தார்.
நேற்று காலையிலேயே அறிவிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் ஒப்புதல் அளித்து விட்டார். பிரதமரின் அனுமதியைத் தொடர்ந்து சர்க்கார் கையெழுத்திட்டார். அதன் பின்னர் அறிவிக்கையை மாலைக்கு மேல் வெளியிட்டது அரசு.
ஆணையம், கண்காணிப்புக் குழு ரத்தாகிறது
அரசு கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது நடைமுறையில் உள்ள பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை ரத்தாகி விடும். அதற்குப் பதிலாக காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவை உருவாக்கப்படும். இனி இவைதான் நதி நீர்ப் பங்கீட்டை கண்காணித்து அமல்படுத்தி வரும்.
மேலும் இனிமேல் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும், நதி நீர்ப் பங்கீடு தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் வாரியம் மற்றும் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவைதான் கவனிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2007ல் வெளியான தீர்ப்பு
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் அதை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து கோரி வந்தது. ஆனால் அதை மத்திய அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. தொடர்ந்து கர்நாடகத்திற்கு சாதகமாகவே நடந்து வந்தது. இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னரே அரசிதழில் அதை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.