சுகோய் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.. பைலட்கள் தப்பினர்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர் மாவட்டத்தில் உள்ள போக்ரான் பாலைவனப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
நாளை மறுதினம் 'Iron Fist' என்ற பெயரில் இரவு-பகல் போர் பயிற்சியில் விமானப் படை விமானங்கள் ஈடுபட இருந்தன. இந் நிலையில் நேற்றிரவு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம் திடீரென தரையில் பாய்ந்து வெடித்துச் சிதறியது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்த வினாடியே இரு பைலட்களும் பாராசூட் மூலம் வெளியே குதித்துவிட்டதால் தப்பிவிட்டனர்.
இந்திய விமானப் படையில் உள்ள மிக நவீனமான விமானம் சுகோய் தான். ரஷ்யத் தயாரிப்பான இந்த விமானங்கள் 1990ம் ஆண்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. இதுவரை இந்த ரகத்தைச் சேர்ந்த சுமார் 4 விமானங்கள் விபத்துக்குள்ளாகி நொறுங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு சுகோய் விமானமும் சுமார் ரூ. 225 கோடி மதிப்பு கொண்டதாகும்.
இதுவரை 160 சுகோய் போர் விமானங்களை ரஷ்யா இந்திய விமானப் படைக்கு வழங்கிவிட்டது. மேலும் 112 சுகோய் விமானங்கள் இந்திய விமானப் படைக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமானிலும் விபத்துக்குள்ளான சுகோய்:
இதற்கிடையே ஏமன் நாட்டு விமானப் படைக்கு சொந்தமான சுகோய் 22 ரக போர் விமானமும் திடீரென வானிலிருந்து விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவமும் நேற்று தான் நடந்தது. இதில் பைலட்டும், விமானம் விழுந்ததில் கட்டடங்கள் இடிந்ததில் மேலும் 11 பேரும் பலியாகிவிட்டனர்.