குஜராத் வழக்கெல்லாம் முடியட்டும், மோடிக்கு விசா தருவது குறித்துப் பார்க்கலாம் - அமெரிக்கா
இதுகுறித்து தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரத்துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முடிவில் திருத்தம் செய்வதோ அல்லது திரும்பப் பெறுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு வேளை அவர் மீதான அனைத்து வழக்குகளும் முடிவடைந்து அவர் நிரபராதி என்று அறிவிக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் முடிவில் மறு பரிசீலனை செய்யப்படும்.
அமெரிக்கா வர யார் வேண்டுமானாலும் விசா கோரி விண்ணப்பிக்கலாம். இருப்பினும் முடிவு என்பது பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் எடுக்கப்படும். அதில் யாரும் தலையிட முடியாது என்றார் பிளேக்.
ஏற்கனவே இதுபோல மோடியை நீண்ட காலமாக புறக்கணித்து வந்த ஐரோப்பிய யூனியன் சமீபத்தில்தான் அந்தத் தடையை நீக்கியது என்பது நினைவிருக்கலாம்.இந்த நிலையில் அமெரிக்காவும் இது போல விசா தடையை நீக்க முன்வர வேண்டும் என்று அமெரிக்க எம்.பிக்களில் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் 1000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக அப்போது முதல் இப்போது வரை முதல்வராக இருந்து வரும் நரேந்திரமோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நரேந்திர மோடிக்கு தடை விதித்தன. இந்த நாடுகளுக்கு செல்ல அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குஜராத் மாநில முதல்வராக 4 வது முறையாக நரேந்திரமோடி பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இதை தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விதிக்கப்பட்ட தடையை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விலக்கிக் கொண்டன.