அப்ப முடிந்துபோய்விட்டதா காவிரி நதிநீர் விவகாரம்... இன்னும் சிக்கல் இருக்கிறதே...
சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் காவிரி பிரச்சனை முடிந்துபோய்விடவில்லை. இனி நடுவர் மன்றத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவது எப்படி? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் நம் முன் இருக்கின்றன.
தமிழகம்- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் விவகாரம் சுமார் 200 ஆண்டுகால பிரச்சனையாகும். ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் இவை எதுவும் பலனின்றிப் போல 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீதிமன்றத்தில் பல வழக்குகளையும் தன்னகத்தே கொண்டதுதான் காவிரி நதிநீர் விவகாரம்.
தற்போதும் கூட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிட்டப்பதுடன் இந்த விவகாரம் ஓய்ந்து விடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கும் கூட கர்நாடகா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இன்னமும் பல சட்ட ரீதியான கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுப்பப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தாமதம்
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகமும், தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநில அரசுகளும் காவிரி நடுவர்மன்றத்தில் முறையிட்டன. அப்போதே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட உத்தரவிடாமல் 6 ஆண்டுகால இழுத்தடிப்புடன் பேச்சுவார்த்தையெல்லாம் உச்சநீதிமன்றம் நடத்தச் சொன்னது ஏன்? என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.
நடுவர் மன்ற தலைவர் யார்?
1996-ஆம் ஆண்டில் நடுவர்மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி என்.பி. சிங் 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி திடீரென பதவி விலகினார். அதன் பிறகு நிரப்பப்படாமல் உள்ள புதிய தலைவர் பதவிக்கு யார், எப்போது நியமிக்கப்படுவர்? அல்லது இந்த நடுவர் மன்றப் பணி முடிந்தே போய்விட்டது என்று சொல்லிவிடுவரா?
தலைவர் நியமன தாமத விளைவு
காவிரி நடுவர்மன்றத்தின் தலைவர் நியமனத்தைத் தொடர்ந்துதான் அதன் முந்தைய தலைமை வழங்கிய தீர்ப்பில் விளக்கம் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்தபோதுதான் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை பிப்ரவரி 20-ந் தேதிக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்திருந்தது. இனி இந்த வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்குமா அல்லது காவிரி நடுவர்மன்றமே அவற்றை விசாரிக்க கேட்டுக் கொள்ளப்படுமா? எனத் தெரியவில்லை
மேலாண்மை வாரியமும் முந்தைய ஆணையங்களும்
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி, நதி நீர்ப் பங்கீட்டை உறுதிப்படுத்த இனி காவிரி மேலாணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அப்படியானால் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையமும் அதன் கீழ் உள்ள காவிரி கண்காணிப்புக் குழுவும் கலைக்கப்பட வேண்டும். இவற்றைக் கலைத்துவிட்டால் மேலாண்மை வாரியம் எப்போது அமையும்? நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தொடர்ந்த வழக்கு தற்போது விசாரிக்கப்படுவதால், அதன் மீதான தீர்ப்பு வரும்வரை காவிரி நதி நீர்ப் பங்கீட்டு முறை எவ்வாறு யாரால் கையாளப்படும்?