நடப்பாண்டிலேயே கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும்: பார்லி.யில் பிரணாப்!
பார்லிமென்ட்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் சில..
நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் தமது மின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. மேலும் 17 நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
விமான துறையை மேம்படுத்துவதற்காக புதிய விமான நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கின்றன. நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 2600 கி. மீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை நாட்டுக்கு பொருளாதர ரீதியாக கடினமாக ஆண்டாகத்தான் இருந்தது. வளரும் நாடுகளில் இன்னமும் பொருளாதர மீட்சி என்பது மந்தமானதாகவே இருக்கிறது. நமது நாட்டில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் மகளிர் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அமல்படுத்தப்பட்டிருக்கும் கிராமவேலை திட்டம் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டமானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் ஊழலைக் குறைக்க முடியும்.
கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்படும். கிராமப் புறங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசு திட்டம் மூலம் புதிதாக 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக 2 போலியோ நோய் தாக்குதல் இல்லை. 10 லட்சம் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் கைத்தறி துறையில் புதிய சலுகைகள் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணை, இயற்கை எரிவாயுக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நமது நாடு ஜனநாயக முறைகளில் உயர்ந்து நிற்கிறது.
மதச்சார்பற்ற நடவடிக்ககைள் நமது பெரும் சாதனையாகும். தாகூர் விருது என்ற பெயரில் புதிய சர்வதேச விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் ஆண்டு விருது பண்டிட் ரவிசங்கருக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.