நடேசன், புலித்தேவன் படுகொலையை நேரில் பார்த்த சாட்சிகள்- தி இன்டிபென்டென்ட்' வெளியிட்டது!
டெல்லி: இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான பா. நடேசன், புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்ததை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டென்ட்' நாளேடு மூலமாக மெளனம் கலைந்திருக்கின்றனர்.
பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன், தி இன்டிபென்டென்ட் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் 2 சாட்சிகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதில் ஒரு சாட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர். தற்போது லண்டனில் இருக்கும் அவர் போரின் இறுதியில் படுகாயமடைந்த நிலையில் உயிரை பாதுகாக்க இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருக்கிறார்.
2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கை ராணுவத்தினரால் போர்க்கள முன் அரங்குக்கு அவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். பின்னர் இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுக்கக் கூடியவராக மாற்றப்பட்டதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். தமது குடும்பத்தினர் இலங்கையில் இருப்பதால் பெயரை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
போர் முன்னரங்கில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு இலங்கை ராணுவம் கொடுத்த பணி என்பது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வருகின்ற புலித் தலைவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவது என்பதாகும்.
புலிகளின் மூத்த தலைவர்கள் பலரும் தங்களது நூற்றுக்கணக்கான வீரர்களுடன் சரணடைந்த காட்சியைப் பார்த்த போது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகவே அது தோன்றியது என்கிறார் அந்த மெய்ப்பாதுகாவலர்.
இலங்கை படையினர் வீழ்ந்து கிடந்த சடலங்களை தமது கைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவற்றில் நடேசன் மற்றும் புலித்தேவனின் சடலங்களும் இருந்தன என்றுஅந்த மெய்ப்பாதுகாவலர் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.
மற்றொரு சாட்சியாக இருப்பவர் பள்ளிக்கூட ஆசிரியர். போரின் இறுதிக் காலத்தில் தாம் போராளிகளால் கட்டாயமாக பணிக்குச் சேர்க்கப்பட்டதாகக் கூறுகிற அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
போரின் இறுதியில் சரணடைந்த தாம் உள்ளிட்ட சிலர் ஒரு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது புலிகளின் தலைவர்கள் பலரும் வெள்ளைக் கொடியேந்தியவாறு இலங்கை ராணுவத்தை நோக்கி வந்தனர். அவர்களில் நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் என பலரும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக புலிகள் சரணடைவதில்லை என்பதால் அது ஆச்சரியமாக இருந்தது என அந்த ஆசிரியர் கூறினார் என அதில் எழுதப்பட்டிருக்கிறது.